Monday, December 10, 2012

இயேசு காவியம் - கண்ணதாசன்

இயேசு காவியம் - கண்ணதாசன்

















கசப்புறு பாத்திரம்

வானி லங்கு நிலவு விழித்தது
    வைய மெங்கும் காற்று விழித்தது
கானி லந்த மலரும் விழித்தது
    கல்லி னுள்ளும் ஈரம் வடிந்தது
ஊனு டம்பு தூங்கி விழுந்தது
    உள்ள மொன்று கண்கள் திறந்தது
தானு லாவும் தோட்டம் தன்னிலே
    தர்ம தேவன் செபத்தை நினைத்தனன்!

மூன்று சீடர் முறைப்படி பின்வர
    முள்ளில் நின்று தெள்ளிய நெஞ்சினன்
ஊன்றி அந்தக் கணத்தில் உரைத்தனன்:
    "உள்ளி ருந்து உதிரம் வடிக்கிறேன்
தோன்றும் அந்தச் சாவினுக் கேற்றதோர்
    துன்பம் என்னைத் தொட்டெடுக் கின்றது
ஆன்ற நீங்கள் விழித்திருப் பீர்களே
    ஆண்ட வர்முன் செபம்செய்து மீளுவேன்!"

என்ற வாறு ஏகினன் தனிமையில்
    ஏறு மேக வானினை நோக்கினன்
நின்ற உடல்கால் நெடுந்தரை தொட்டன
    நெஞ்சம் அந்த நிலத்தினில் சாய்ந்தது!
மன்றி லாழ்ந்த துயரம் வெளிப்பட,
    "தந்தை யே!இக் கசப்புறு பாத்திரம்
சென்று போவ தாயின்உம் விருப்பமே
    சிறிதும் எந்தன் விருப்பம் இதிலிலை!


"நன்மை தீமை எதுவரு மாயினும்
    நான்கு டிக்க விரும்புவீர் நீரெனில்
முன்வி தித்த விதிப்படி மாந்துவேன்
    மூளு கின்ற யாவும்உம் செய்கையே!
என்ப தாகச் செபத்தை முடித்தபின்
    ஏற்ற தோழர் இடத்தினில் மீண்டனர்
அன்பு மிக்க தோழர்க ளோமிக
    ஆழ்ந்த தூக்கம் தன்னில் இருந்தனர்!

"உங்கள் கண்ணில் உறக்கமும் உள்ளதோ,
    உள்ளம் கூட உறங்குவ தென்னவோ?
கண்கள் கொண்டு கடவுளைக் காணுவீர்
    கனிவு மிக்க செபத்தில் இறங்குவீர்!
மங்க ளங்கள் பாடிடும் முன்னமே
    மற்ற வாத்திய ஒலிகளும் நிற்குமோ?
உங்கள் உள்ளம் உறுதியு டைத்ததே
    ஊனு டம்பே வலிமை இழந்தது!"

இன்ன கூறி மீண்டும் திரும்பினார்
    இறைநி னைந்து மண்டியிட் டோதினார்
பின்னர் அந்தச் சீடரை நோக்கினார்
    பேணு கின்ற சீடர்கள் தூங்கினார்!
சொன்ன பின்பும் தூங்கிய சீடரைத்
    தூங்க விட்டு நாதர் செபிக்கிறார்!
மின்னு வானத் தூதுவன் வந்தனன்
    மேலெ ழுந்தே ஆறுதல் கூறினன்!

சோர்வி லாது நாதன் செபித்ததும்
    துன்ப நாடி சூழ வெடித்தது
வேர்வை யோடு இரத்தம் வடிந்தது
    மேனி யெங்கும் செம்புனல் பாய்ந்தது!
தேர்வ தான தந்தை செபத்திலே
    தேவ மைந்தன் சேர்ந்து கலந்தனன்!
போர்மு கத்தின் உறுதியைக் காட்டியே
    பொன்னெ ழுத்தில் சீடர்பால் கூறுவார்:

"நேர மின்று நெருங்கியே வந்தது
    நேரும் ஒன்றை நினையில் வைப்பிரே!
ஆறும் இந்த மனுமகன் பகைவரின்
    அடிமை போலப் பிடிபடப் போகிறான்
சேரும் இந்தப் பாவிகள் வாழவே
    தேவ மைந்தன் கையடி படுகிறான்
நீரும் அந்தச் சூழ்நிலை காணவே
    நேரில் வந்தான் வஞ்சக நண்பனே!"

















வஞ்சக நண்பன்

கடவுள் மைந்தன் சொல்லி முடிக்குமுன்
    காசு பெற்ற யூதாஸ் சீடனும்
இடம றிந்து குருக்களும் வேதரும்
    இவர்தி ரட்டும் ஆட்களும் வீரரும்
தடிகள் கத்தி அம்புகள் விலங்குகள்
    தாங்கி அங்கு வந்து குவிந்தனர்!
மடைதி றந்த பகைவரைப் பார்த்ததும்
    மைந்தர் இயேசு நேர்கொண்டு நின்றனர்!

வேவு பார்க்கும் ஒருவனைக் கொண்டுதான்
    வீரர் கூட வெற்றிகள் காண்கிறார்
பாவ ஜென்மம் ஒருவன்இ லாவிடில்
    பக்தி மார்க்கம் பயனுள தல்லவே!
தேவ மைந்தன் தடயம் அறிந்ததால்
    சேர்ந்த யூதாஸ் இடத்தினைக் காட்டினன்
கோவில் பூனை புலியைப் பிடித்திடக்
    கூட்டத் தோடு வந்து விழுந்தது!

"தூய மைந்தன் போலொரு சீடரும்
    தோற்றம் தன்னில் இருப்பத னாலவர்
சாய்ந்த உடலில் மண்டியிட் டவர்தமை
    முத்த மிட்டு தலையசைப் பேன்உடன்
பாய்ந்து நீங்கள் அவரைப் பிடிக்கவும்
    பாக்கிக் காசு கையில் கொடுக்கவும்"
ஆய வார்த்தை கூறியன் றோஅவன்
    அழைத்து வந்தான் பகைவர்கள் யாரையும்!


நாதன் முன்னம் மண்டியிட் டானவன்
    "நலமே வாழ்க குருவே!" என்றனன்!
தூது சொல்ல முத்தமிட் டான்அவன்
    தூய மைந்தன் அவனிடம் சொல்கிறார்:
"மோது கின்ற அன்புடை நண்பனே!
    முத்த மிட்டுக் காட்டிக் கொடுக்கவோ
காத லோடு என்முனம் வந்துள்ளாய்?
    கடவுள் தம்மை உனக்கென வேண்டுவேன்"

1 comment: