Saturday, October 28, 2017

வெக்கை - புதினம் - பூமணி

வெக்கை - பூமணி - கதைச்சுருக்கம்
பின்வரும் இணையதளத்தில் இருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது.
கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். கரிசல் விவசாயிகளின் வாழ்க்கை - பருவநிலை, மண்ணின் வாகு, கடின உழைப்பு என்று எத்தனையோ காரணிகளை நம்பி இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி கிராமத்து பண்ணையார்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் குறு விவசாயிகளுக்கு இருந்தது. இப்பொழுது கூட தரகர்களிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அவர்கள் சிக்கித் தவிப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தக் கதையும் விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான்.

எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. இந்த சின்ன முடிச்சில் என்ன சொல்லிவிட முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு. வாசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்களை நுணுக்கமாக பூமணி இந்நாவலில் சொல்லி இருக்கிறார்.

செலம்பரத்தின் அப்பா ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தன்னுடைய சந்ததிகளுக்கு வளைத்துப் போட பார்க்கிறார். அப்படியே செலம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் வளைத்துப் போட பார்க்கிறார். அங்குதான் வருகிறது வினையே!. நிலவிவகாரத்தால் உட்புகைச்சல் ஏற்பட்டு செலம்பரத்தின் அண்ணன் கொலையாகிறான். இந்த குடும்பப் பகையை மனதில் வைத்து, இருள் கவிழ்ந்த மாலை நேரத்தில் செலம்பரம் வடகூரானை வெட்டி வீழ்த்துகிறான். தன்னைப் பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசி தப்பிக்கிறான். இதனை அவனுடைய அப்பாவும், மாமாவும் தெரிந்துகொள்கிறார்கள். எனவே விரைவாக செயல்பட்டு செலம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆசையாக வளர்த்த நாயையும், ஆடுகளையும் அத்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு தலைமறைவாக வாழப் புறப்படுகிறான். 

கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதுடன் நாவல் முடிகிறது.

யதார்த்த நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டவாறே முழு நாவலும் நகர்கிறது. 


வெக்கை நாவல் குறித்த நூல் மதிப்புரை - 
https://www.youtube.com/watch?v=rshbKquKcQE




வெக்கை - நாவல் குறித்து  குமுதம் தீராநதி இதழில் வெளியான கட்டுரை:

இணைப்பு:http://ramasamywritings.blogspot.in/2012/02/blog-post_09.html
பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு -அ.ராமசாமி
1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.
ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.
முதல் நாவல் மீதான மோகத்திற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முதன் முதலாக எழுதிக் காண்பிக்கும் வெளியும் மனிதர்களும் அதுவரை எழுத்தில் பதிவாகாமல் இருப்பது முதன்மையான காரணம். கவனிக்கப் படாத மனிதர்களைக் கவனிக்கப்படாத மொழியில் எழுதிக் காட்டிய புதுமையை ஒரு முறை தானே தர முடியும். புதுப்புது மனிதர்களை வெவ்வேறு கால கட்டங்களில் நிறுத்திக் காட்டுவதன் மூலம் புதுப்புது படைப்புகளைத் தர முடியும். அதற்காகப் புதுப்பிரதேசம் ஒன்றிற்குள் நுழைந்து புதுவகை மொழி அடையாளத்தை உருவாக்கும் போது அவனது வட்டாரம் சார்ந்த அடையாளம் காணாமல் போய்விடும். அப்போது அவன் பொதுத்தள எழுத்தாளன் என்னும் அடையாளத்துக்குள் வந்து சேர்ந்து விடுவான். அப்படி வந்து சேர்ந்த தமிழ்ப் புனைகதையாசிரியர்களுக்கு உதாரணங்கள் வேண்டும் என்றால் எஸ்.ராமகிருஷ்ணனனையும், ஜெயமோகனையும் தான் சொல்ல வேண்டும். வட்டாரம் சார்ந்த எழுத்தாளன் என்னும் அடையாளமே தீவிர இலக்கிய அடையாளமா? பொதுத் தளத்திற்குள் நுழைந்து கலக்குவதே தீவிர இலக்கியத்தின் வேலையா? என்பதைப் பிறிதொரு முறை விவாதிக்கலாம். இப்போது பூமணிக்கு வரலாம்.

இயல்புவாத எழுத்தின் ஆகச் சிறந்த தமிழ் அடையாளமாக பூமணியின் பிறகு நாவல் இருக்கிறது இந்திய சுதந்திரத் திற்குப் பிந்திய மாற்றங்கள், சமூகத்தின் அடித்தள மக்களுக்கு நினைப்பாகக் கூடப் போய்ச் சேரவில்லை என்ற காத்திரமான அரசியல் விமரிசனத்தை- பெருங்கோபத்தை- ஆவேசமற்ற மொழியில் எழுதிக்காட்டிய சாதனை பூமணியின் பிறகு நாவல். ஆனால் நான் பிறகைக் காட்டிலும்,வெக்கை நாவலையே அவரது முக்கியமான நாவலாகக் கருதுகிறேன். அப்படிக் கருதுவதற்கு இலக்கியம் பற்றிய எனது நிலைபாடு மட்டுமே காரணம் அல்ல; எழுத்தின் நோக்கம் மற்றும் வெளிப்பாட்டு முறை குறித்த பொதுவான பார்வையும் காரணமாக இருக்கிறது. மனிதர்களின் அறிவு சார்ந்த விழிப்புணர்வினூடாக சமூகத்தில் நடக்கும் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் எழுதிக் காட்டுவதே நவீன எழுத்தின் முக்கியப் போக்காக இருக்க முடியும். தனக்குள் இருக்கும் எதிர்வுகளாலும், தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்திலுள்ள முரண்களாலுமே மனிதன் தன்னை உணர்கிறான்; தன்னைச் சூழ்ந்துள்ள மனிதர்களை உணர்கிறான். தன்னை அறிய உதவுவதே எழுத்தின் –வாசிப்பின் வேலை என்பதற்குள் தன்னைச் சுற்றியுள்ள சூழலை ஒதுக்கி விட முடியாது.
தான் எழுதும் எழுத்துக்குள் தனது இருப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், தான் உருவாக்கும் பாத்திரங்களின் இயல்பான மொழிக் கூறுகளை மட்டுமே தருவதே பூமணியின் எழுத்து முறை. அதனை வாசிப்பது கவனமாகத் தொகுக்கப் பட்ட ஆவணப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை தரக்கூடியது. அவரது நாவல்களின் காட்சி அடுக்குகள் வெளியையும் காலத்தையும் மாற்றும் நாடக உத்தியின் வழியாகவே மாறுகின்றன.  காலத்தை அதிகமும் குழப்பாமல் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் போய் விட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பி விடும் ஒற்றை வளைவுகளே அவரது எழுத்தில் உள்ளன. அதனால் தான் அவரது நாவல்கள் எளிய கதை சொல்முறை கொண்டதாகத் தோன்றுகின்றன. அவரது விவரிப்பு முறையை வாசித்துக் கொண்டே போகும்போது கதை நிகழும் களனின் அனைத்துப் பரப்பும் கண் முன் விரிவதோடு, பாத்திரங்களின் இருப்பும் அசைவும் கூட அதனதன் அளவில் எழுதப்பட்டுள்ளன என்பதை முதல் வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தன்மை அவரது முதல் நாவலான ’பிறகு’வில் காணப்படுவதைக் காட்டிலும் ’வெக்கை’யில் கச்சிதமாக வெளிப் பட்டுள்ளது. மொழிநடை சார்ந்த கச்சிதத் தன்மையை உருவாக்க அவருக்குப் பயன்படும் முக்கியமான மொழிக் கூறாக இருப்பன உரையாடல் களே. இதுவும் நாடக இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றுதான். குறிப்பிட்ட சூழலில் இருக்கும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதை கதை சொல்லியின் இடையீடின்றி எழுதிக் காட்டியதில் தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில் பூமணியே மிக முக்கியமானவர். அவரது பல சிறுகதைகள் கதைசொல்லும் நபரே இல்லாமல், வெறும் உரையாடல்கள் வழியாக நகர்ந்து முடிந்து போவதாக அமைந்துள்ளன. சிறுகதைகளில் பாத்திரங்களின் முரண்பாட்டை வெளிப்படுத்த உதவும் உரையாடல் வடிவம் மொழிசார்ந்த கச்சிதத் தன்மையைத் தாண்டி கதை நிகழும் கால எல்லையை உணர்த்தும் விதமாக நகர்த்தப் பட்டுள்ளதை வெக்கை நாவலை வாசிக்கும்போது உணர முடியும்.
அதிகாரத்தின் குறியீடாக நாவல் முழுக்கச் சுட்டப்படும் வடக்கூரான் கொலை செய்யப்படும் நிகழ்வோடு தொடங்கும் வெக்கை நாவல் சிறுவன் சிதம்பரமும், அவனது அய்யாவும் அடுத்த எட்டு நாட்களுக்கு எவ்வாறு போலீஸ்காரர் களிடமிருந்து தப்பித்துத் தலைமறைவாக இருந்தார்கள் என்பதைத் தான் காட்சிப் படுத்துகிறது. அத்துவானக் காட்டில் இருக்கும் இடிகிணறு, கமலைத்திட்டு, மலைப் பாறை இடுக்கு, பன்றி ஒரு பக்கம் உருமிக் கொண்டே இருக்கும் கரும்புத் தோட்டம், கண்மாய்க்குள் இருக்கும் திட்டு, ஆள் நடமாட்டமில்லாத கோயில், அதன் பக்கத்தில் இருக்கும் மரம் என ஒவ்வொரு நாளும் ஓரிடமாக அலைந்து எட்டாம் நாள் கோர்ட்டில் ஆஜராவதற்குத் தயாராகிறார்கள்., அப்படி அலையும் போது பழைய நினைவுகளையும் குடும்ப வரலாற்றையும் தந்தையும் மகனுமாகப் பேசிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் அலைவதாக நாவல் நகர்கிறது. அந்த எட்டு நாட்கள் தான் நாவலின் கால அளவு. ஆனால் நாவலை வாசிக்கும் ஒருவருக்கு சிதம்பரத்தின் மூன்று தலைமுறைக் கதையைப் பல பத்தாண்டுகளின் கதையை வாசித்த அனுபவம் கிடைக்கிறது என்பதும், அந்த மூன்று தலைமுறையிலும் உறைந்து கொண்டிருக்கும் வெக்கையின் வெடிப்பே சிதம்பரத்தின் செயல்பாடு எனக் காட்டியதும் தான் பூமணியின் எழுத்து சாதனை. .

நாடகத்தன்மை சார்ந்து சிறப்பான கூறுகள் என நான் கருதும் இந்த அம்சங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கிய வகைக்கும் தனித்தனியான சொல் முறையும் கட்டமைப்பும் இருக்கிறது என நம்பும் விமரிசகர்கள் வெக்கை நாவலின் கட்டமைப்பை சினிமாத் தனமானது எனச் சொல்லக் கூடும். சினிமாத் தனத்திலும், அதிர்ச்சிக் காட்சியில் தொடங்கி ஆர்வத்தைத் தக்க வைக்கும் உத்தியில் அமைந்த சினிமாத்தனம் நிரம்பிய சாதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். ஆரம்பம், முரண், முரண் வளர்ச்சி, உச்சநிலை என வளரும் நாடகம் போல அல்லாமல், உச்சநிலையில் தொடங்கி அதன் விளைவுகள், பின் விளைவுகள், முன் காரணங்கள் என அமைக்கப்படும் ஆர்வமூட்டும் திரைக்கதை அமைப்பைப் போன்ற கட்டமைப்பையே வெக்கை நாவல் கொண்டிருக்கிறது என்பதை நானும் மறக்கவில்லை.ஆனால் அந்த அமைப்பு வலிந்து உருவாக்கப்படும் நாயகத்தனத்தை நோக்கியோ, நம்ப முடியாத முடிவை வாசிப்பவர்களிடம் திணித்துவிடும் நம்பிக்கையோடோ அமைக்கப் படவில்லை. அப்படி அமைக்கப் படுவது வெகுமக்கள் சினிமாவின் தந்திரம் அல்லது சூத்திரம். அத்தகைய கூறு எதுவும் வெக்கையில் இல்லை என்பதே நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒன்று.
ஆர்வத்தைத் தூண்டும் வன்முறைக் காட்சியொன்றைச் சித்திரித்துக் காட்டுவதன் மூலம் வாசகனைத் தன் எழுத்தின் பால் ஈர்த்துக் கட்டிப்போட வேண்டும் என்னும் நோக்கம் நாவலாசிரியருக்கு இல்லை. அப்படியொரு நோக்கம் இருந்திருந்தால், அதிர்ச்சையை அளித்து ஆர்வமூட்டும் அந்தக் காட்சியை-வடக்கூரான் கொலை செய்யப்படும் காட்சியை- ரத்தமும் சதையுமாக ஆசிரியர் கூற்றில் சொல்லியிருப்பார். அப்படிச் சொல்ல முனையும் போது அதற்கான வார்த்தைகளை உருவாக்கிப் புனைவுமொழியொன்றைக் கட்டியெழுப்பவும் வாய்ப்புகளுண்டு. ஆனால் அப்படிச் செய்வதை கவனமாகத் தவிர்த்து விட்டு, வன்முறையில் ஈடுபட்டவனின் நினைவோட்டமாக அந்தக் காட்சியை எழுதிக் காட்டியுள்ளார் பூமணி. ஒரு மனிதனின் மனவோட்டத்தில் ஐயங்களும் எண்ணங்களும் மாறிமாறி உருவாகிக் காட்சிப் படுத்தலைத் தவிர்த்து விடும் வாய்ப்புகளே அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வடக்கூரானை வெட்டிச் சாய்த்த செலம்பரம் (சிதம்பரம்) என்னும் பதினைந்து வயதுச் சிறுவனின் நினைவின் வழியாக அந்தக் காட்சி சொல்லப்படுகிறது. கையை மட்டும் துண்டாக்க நினைத்ததற்கு மாறாக அரிவாள் நுனி, வடக்கூரானின் விலாவிலும் மாட்டிக் கொள்ள, அவன் வெட்டப்பட்ட கிடாயைப் போலக் கத்திய காய்ச்சியும், தன்னைத் துரத்தியவர்களைக் கையெறி குண்டுகள் மூலம் புகையெழுப்பித் தப்பித்து வந்து ஊரை விட்டு வெளியேறித் தப்பித்ததையும் அவனே நினைத்துக் கொள்ளும் விதமாகவே நாவல் தொடங்கப்பட்டுள்ளது.  குரூரமான கொலைக் காட்சி ஒன்றைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பு இருந்த போதும் அதனைத் தவிர்த்து விட்டு நினைவோட்டமாகச் சொல்வதை -எச்சரிக்கையாகக் கையாண்டுள்ளதைச் சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இந்த எச்சரிக்கை வாசகர்களிடம் உணர்ச்சி வசப்படச் செய்தலைத் தவிர்க்கச் சொல்லும் எச்சரிக்கையாகும். அத்தோடு கதாபாத்திரத்தின் மன ஓட்டம் எழுப்பும் நியாயங்களுக்குள் சேர்ந்து வாசகர்களும் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நோக்கம் கொண்டதும் கூட.
வாசகர்களை உணர்ச்சி வசப்படும் செயல்பாட்டுக்குள் தள்ளாமல் மன ஓட்டத்தோடு சேர்ந்து சிந்திக்கும்படி தூண்டும் எழுத்தே தேர்ந்த எழுத்தின் அடையாளம் தனது அண்ணன் கொலை செய்யப்படக் காரணமான வடக்கூரானைக் கொன்று பலி வாங்கிய சிதம்பரத்தின் மனதுக்குள் இருந்த வெக்கையைப் பழிக்குப் பழி வாங்கும் தனிநபர் வன்முறை சார்ந்த உணர்வு என நினைக்கும் வாசிப்பனுபவத்தைச் சிலர் அடையக்கூடும். தன் பூர்வீகக் கிராமத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் ஒருவனைக் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்திருக்கும் சிதம்பரத்தின் அய்யாவுக்குள் இருந்த அதே கொலைவெறியும், வன்முறை உணர்வுமே சிதம்பரம் என்னும் பதினைந்து வயதுச் சிறுவனிடமும் வெளிப்பட்டுள்ளது என்பதையே பூமணி எழுதிக் காட்டியுள்ளார் என நாவலின் நிகழ்ச்சிக் கோர்வைகளைக் கொண்டு ஒருவித எதிர்மறை வாசிப்பனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
நிலவுடைமையாளர்களின் சொத்து சேர்க்கும் ஆசைக்கு எதிராக இருக்கும் நபர்களை ஆள் வைத்து அடிக்கும் நிலக்கிழார்களைப் பழி வாங்குவதற்குக் கொலையை தவிர வேறென்ன வழி இருக்க முடியும்? என்று கேட்கும் தனிநபர் அழித்தொழிப்பை நியாயப்படுத்தும் விதமாகவே பூமணியின் வெக்கை நாவல் அமைந்துள்ளது எனச் சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்வதைச் சிலர் பாராட்டாகவும் நினைக்கலாம்; இன்னும் சிலர் வன்முறையை ஆதரிக்கும் எழுத்து என்ற எதிர்மறையை அதனோடு இணைத்துக் குறையாகவும் சொல்லலாம். பாராட்டானாலும்சரி, குறை கூறலானாலும்சரி அப்படிச் சொல்பவர்கள் நாவலின் ஒரு அம்சத்தை மட்டுமே வாசித்திருக்கிறார்கள் என்பதே சொல்லப்பட வேண்டிய ஒன்று. சிதம்பரமும் அவனது அய்யாவும் அலையும் தலைமறைவு வாழ்க்கையும், அவர்கள் நினைத்துக் கொள்ளும் பழைய நிகழ்ச்சிகளும் மட்டுமே அவர்களின் வாசிப்புக்கான கூறுகளாக இருந்துள்ளன. அவ்வாறு வாசிக்காமல், அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் உரையாடல்களையும், அதனூடாக ஓடும் நினைவோட்டங்களையும், அவற்றில் வெளிப்படும் நியாயங்களையும் சேர்த்தே வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும்போதே வடக்கூரான் என்ற நபரைப் பூமணி எத்தகைய பாத்திரமாக வாசகர்கள் முன் வைக்க விரும்பியுள்ளார் என்பது புரிய வரும்.
தொடக்கத்திலேயே வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்ட பாத்திரமாக இடம்பெறும் வடக்கூரான் என்னும் அந்தப் பாத்திரம் பாரம்பரியமான பெரும் விவசாயிகளையே ஏமாற்றி ஜின்னிங் பாக்டரி முதலாளியாக மாறும் புதிய சக்தி,  விவசாயப் போராட்டத்தின் போது அதிகாரத்தைத் தனது கையில் எடுத்து அப்பாவி வண்டிக்காரனைச் சுட்டுக் கொன்றதோடு அதற்குத் தண்டனை வாங்கித் தர வேண்டிய காவல்துறையையும் நீதித்துறையையும் தனக்கு ஏவல் செய்யும் அமைப்புகளாக மாற்றிக் கொண்டவன். நியாயமாகச் செயல்பட வேண்டும் என நம்பும் பழைய மனிதர்களை அடாவடியாக ஓரம் கட்டிவிட்டுக் காசு கொடுத்துக் கையாட்களையும் அடியாட்களையும் உருவாக்கிப் பொதுவெளியின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருப்பவன்;சாதாரண வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டு வரும் அதிகார மையம். இத்தகைய சக்திகளை வளரவிடாமல் தடுக்க வேண்டிய அரசு அமைப்புகளே அவர்களின் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் பயந்து போகும்போது தனி மனிதர்களின் மனத்திற்குள் வெக்கைதான் பெருக்கெடுக்கிறது என உணர்த்துவதையே இந்நாவலில் பூமணி செய்துள்ளார். 

வடக்கூரானின் தோட்டத்தில் ஆடு மேய்ந்ததைக் காரணமாக்கித் தன் மூத்த மகனைக் கொன்றதன் காரணம் அந்தத் தந்தைக்குத் தெரியும். வடக்கூரானின் நிலங் களுக்குள் இருக்கும் தனது துண்டு நிலத்தை வடக்கூரானுக்கு விற்கத் தயாராக இல்லை என்று மறுத்ததுதான் அந்தக் கொலைக்குப் பின்னுள்ள காரணம். தனது பிடிவாதத்தால் மகனைப் பலி கொடுத்து விட்ட ஒரு தந்தையின் மனதுக்குள் இருந்த வெக்கையின் அளவுக்குச் சற்றும் குறையாமல் அவனது இளையமகன் – பதினைந்து வயதுச் சிதம்பரத்திடமும் வெக்கை தகித்தது மேலெழும்புகிறது. தனது மூத்த மகனைக் கொன்று புதருக்குள் தூக்கிப் போட்டுவிட்டு ஊர் நியாயம் பேசித் திரியும் வடக்கூரானைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்குத் தந்தை வந்த சேர்ந்தது போலவே தனது தமையனின் இருப்பை இல்லாமல் செய்தவனின் கையை வெட்டி அலைய விட வேண்டும் எனத் தம்பி சிதம்பரமும் முடிவெடுக்கிறான். ஆனால் கைக்கு மட்டும் வைத்த குறி தவறி ஆளையே காலி செய்து விடுகிறது. இதன் தொடர்ச்சியாக நடக்கும் அலைவுகளும் தலைமறைவு வாழ்க்கையும் சிதம்பரம் குடும்பத்திற்கு வடக்கூரானின் அதிகாரம் நேரடிப் பகையாக மாறியது போலக் காட்டப்பட்டாலும், வடக்கூரானின் இருப்பு அந்தச் சிறு நகரத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கே துயரமாக இருந்தது என்பதையே சிதம்பரத்தின் நினைவோட்டங்கள் வழி பூமணி விவரிக்கிறார்.
விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத அப்பாவி வண்டியோட்டியைச் சுட்டுக் கொன்று பயத்தின் வழியாக அதிகாரத்தை உருவாக்கும் வடக்கூரான் வெறும் சொத்து சேர்க்க ஆசைப்படும் நிலக்கிழார் மட்டுமல்ல; பொது வெளியில் அனைத்து விதமான அமைப்புகளையும் சீர்குலைத்துத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் புதுவகை மனித எதிரி என்பதைத் தந்தையும் மகனும் பேசும் பேச்சுகளில் மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் மாமா, அத்தை, அம்மா என ஒவ்வொருவரின் உரையாடல் வழியாகவும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். வடக்கூரான் கொலைக்குப் பிந்திய தலைமறைவு வாழ்க்கையில் சிறுவன் சிதம்பரத்தின் மனத்திலும், அவனது அய்யாவின் மனத்திலும் எழும்பி எழும்பி அடங்காமல் தகிக்கும் கொதிப்பின் வெப்பம் தான் வெக்கை நாவலின் சாரமும் அர்த்தமும். அந்தக் கொதிப்பை உருவாக்குபவனாகவும், உரமூட்டி வளர்த்தவனாகவும் சுட்டப்படும் வடக்கூரான் நாவலில் எதிர்நிலைப் பாத்திரமாக நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், தனது எழுத்தின் மூலம் அவன் சிதம்பரத்திற்கும் அவனது குடும்பத்திற்கும் மட்டுமே எதிரானவன் அல்ல என்பதைப் பூமணி கவனமாக உருவாக்கியுள்ளார். அந்தக் கவனம் சின்னச் சின்னக் குறிப்புகளால் வடக்கூரான் போன்றவர்கள், உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதோடு, அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அரசதிகார அமைப்புகளைத் தங்களின் சொந்த நலனுக்கேற்றபடி இயங்கும் அமைப்புகளாக மாற்றும் அபாயகரமான சூழலை உருவாக்குபவர்கள் என்பதையும் உணர்த்திக் காட்டுகின்றார். அடிப்படையான நீதி, நியாயங்கள் என எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனித உறவுகளையும் உயிர்களையும் துச்சமாக நினைக்கும் மனிதர்களின் வகை மாதிரி வடக்கூரான்.

1960 களுக்குப் பின்னர் உருவான வடக்கூரானின் நகல்கள் தான் இன்று தமிழ்நாட்டின் வாழ்க்கை யைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிம்பங்கள். கிராமம், நகரம் என எல்லா வெளிகளையும் ஆக்கிரமித்து, நெறிமுறை களின்படி இயங்க வேண்டிய ஜனநாயக அமைப்புகளைச் சிதைத்து, அவற்றைத் தங்களுக்குச் சேவகம் செய்யும் நிறுவனங்களாக ஆக்கி விட்டவர்கள். தமிழ்நாட்டின் பேரரசியல் தொடங்கி நுண்ணரசியல் வரை செயல்படும் வடக்கூரான்களைத் தோற்றக் களனிலேயே அடையாளப்படுத்திய வெக்கை நாவல் இப்போதும் வாசிக்க வேண்டிய நாவல் என்பதே எனது பரிந்துரை.

========================================  நன்றி: தீராநதி/ பிப்ரவரி/20

Saturday, October 14, 2017

நாற்காலிக்காரார் - ந.முத்துசாமியின் நவீன நாடகம்

நாற்காலிக்காரர் 
இணைய செய்திகள்:
 நாற்காலிக்காரர் நாடகத்தில், அரசியல் அபத்தம் அதில் தோலுரித்துக்காட்டப்படுகிறது. காலத்தைக் கழிக்க சுவாரஸ்யம் தேவைப்படுகிறது. மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். கோலிக்குண்டு, சீட்டுக்கட்டைவிடவும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் ! வாழ்க, ஒழிக கோஷம் போடுகிறார்கள். சுவாரஸ்யத்தைக் கூட்ட வெற்றி தோல்வி வேண்டும் என்கிறார்கள். அதுபொருட்டு வாக்கு கேட்கிறார்கள். வாக்குறுதி அளிக்கிறார்கள்.  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டபின் வாக்காளன் பலியாடாகிறான். அரசியல் நடப்பின் அபத்தம் !
‘’ஒரு பார்வைக்கு வெளிப்படையாகத் தெரிகிற ஒரு அர்த்தத்தையும் இன்னொரு பார்வைக்கு அர்த்தங்கள் கிளைத்துக் கொண்டு போகிற பூடகமான வகையிலும் எழுதப்பட்டுள்ள ஒரு காட்சிப் படிமம் இது’’ என்று இளங்கோவனின் ஊடாடி நாடகத்திற்கான முன்னுரையில் ந.முத்துசாமி எழுதியிருப்பது இவரது நாற்காலிக்காரர் நாடகத்திற்கும் சாலப்பொருந்தக்கூடியதுதான்.
‘கலை’ என்ற சொல்லிற்கு ‘கலைத்துப் போடுதல்’ என்கிற அர்த்தமும் உண்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற மதிப்பீடுகளை, செய்துகொண்டிருக்கிற சமாதானங்களை நோக்கித் துல்லியமாக எறியப்பட்ட ஒரு கல்… நாற்காலிக்காரர் !
மரபிலிருந்து மாறுபட்டிருந்த ந.முத்துசாமியின் நாடகங்கள் மேடையேற்றம் காணும் வாய்ப்பற்று இருந்தன. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து  1977 –ல் அவர் ‘கூத்துப்பட்டறை’ எனும் நாடக அமைப்பை உருவாக்கினார். அவரது நாடகங்களை நடிப்பதற்கான பிரத்யேகமான நடிகர்கள் பயிற்சியினால் உருவாக்கம்பெறத் துவங்கினார்கள். நவீன நாடகமேடையும் உயிர்கொண்டது.
ந.முத்துசாமி எழுதிய நாடகங்களில் பிற நாடகக் குழுக்களாலும் அதிகளவில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நாற்காலிக்காரரும் ஒன்று. எழுதிய காலகட்டத்திலிருந்து சமகாலப் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.
தகவல் தளம்:http://malaigal.com/?p=7370
நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-1


நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-2

நாற்காலிக்காரர் நாடகம்- பகுதி-3


காணொளிகள்: Youtube தளம்

Tuesday, October 3, 2017

மெய்ப்பொருள் நாயனார் புராணம் - பெரிய புராணம் - சேக்கிழார்

மெய்ப்பொருள் நாயனார் புராணம்


திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ள நடு நாடு. இந்நடு நாட்டிற்குச் சேதி நாடு என்றும் மற்றொரு பெயர் உண்டு. இருநாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்ற இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர். 

இஃது தென்பண்ணை ஆற்றின் தென்கரையில் சிறப்புடன் விளங்கியது. இந்நகரில் மலாடர் என்னும் மரபினோர் செங்கோலோச்சி வந்தனர். சிவநெறியில் சிறந்து நிற்போரும், அடியார்கள் கருத்தறிந்து ஏவல் புரியும் சுற்றமும் பெற்ற இம்மரபில் தான் மெய்ப்பொருள் நாயனார் தோன்றினார். அம்மன்னர் சிவனடியார்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் என்று கருதி வந்ததால் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றார். 

இவர் திருக்கோவிலுரைத் தமது ராஜதானியாகக் கொண்டு அறநெறி வழுவாது மக்களைக் காத்து அரசாட்சி புரிந்து வந்தார். மெய்ப்பொருளார் அரசியல் நெறி பிறழா அரும் காவலன். மக்களுக்காக, நன்னெறியில் வாழ்ந்து காட்டும் குடிமன்னன்! வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட அஞ்சா நெஞ்சன். இம்மன்னன் அடியார்களை அல்லும் பகலும் போற்றிப் பணியும் சிவநேசச் செல்வன்! ஞானத்தவக் கொழுந்து. 

இம்மன்னனின் மனதில் சிவனடியார்களின் தோற்றப் பொலிவு, கல் மேல் எழுத்துப் போல் நிலைத்திருந்தது. மன்னவரின் செல்வக் குவியல் கோவில் திருப்பணிக்கும் பயன்பட்டு வந்தது! இவ்வாறு பண்போடும் பக்தியோடும் வாழ்ந்து வரும் புரவலனுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது! இம்மன்னனின் பகை அரசனான முத்தநாதன், பன்முறை போர் புரிந்து புறமுதுகு காட்டி ஓடியவன்! இவன் சூழ்ச்சியால் மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான். 

முத்தநாதன் சைவ வேடம் பூண்டான். திருநீற்றை விதிமுறைகளோடு, எந்தெந்த அங்கங்களில் எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்பதை அறியாத அந்நாத்திகன், திருநீற்றை மேனி முழுவதும் வாரிப் பூசிக் கொண்டான். கையிலே ஓலைக்கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அந்த ஓலைக் கட்டுக்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தை அடைந்தான். 

மன்னவனைப் போலவே, பக்தி மிகுந்த குடிமக்கள், இக்கபட வேடதாரியை, உண்மையான சைவ சன்மார்க்கத் தவசி என்று எண்ணிக் கைகூப்பி வணங்கினர். காண்போர் அனைவரும் உள்ளெழுந்தருள்க என்று வாழ்த்தி வழி காட்டியதால், தங்குதடை ஏதுமின்றி முத்தநாதன் மன்னரின் மாளிகையை அடைந்தான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தான். 

முத்தநாதன், மன்னனை உடனே பார்க்க வேண்டும்! என்ற எண்ணம் முகத்திலே பிரதிபலிக்க, தத்தனை ஏற இறங்கப் பார்த்தான், குறிப்பால் அப்பொருளை உணர்ந்த தத்தன், முத்தநாதனை நோக்கி, என் தலைவர் அகத்தே துயில்கின்றார். காலம் அறிந்து தேவரீர் உள்ளே எழுந்து அருளுதல் வேண்டும் என்றான். தத்தன் வார்த்தைகளை அம்மூடன் செவிமடுப்பதாக இல்லை. அவன் தடையையும் மீறி மன்னவர்க்குத் தருமத்தை அருளிப் போகவே இங்கு எழுந்தருளியுள்ளோம் என்று கூறியவாறே கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான். 

மலர் மஞ்சத்திலே மன்னவன் அருகே அமர்ந்திருந்த அரசியார், சப்தம் கேட்டுத் திரும்பி, சிவனடியார் ஒருவர் வருகிறாரே என்று அஞ்சியவராய், சட்டென்று மஞ்சத்தினின்றும், துணுக்குற்று எழுந்தாள். தம் தலைவரையும் எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்தார் மன்னர். சிவாயநம என்று குரல் கொடுத்தான் முத்தநாதன். அடியவர் குரல்கேட்டு மன்னர் அகம் மகிழ்ந்தார். திரும்பிப் பார்த்தார். 

தம் எதிரில் சிவனடியார் நிற்பதைக் கண்டார்! கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட அரசர், திருநீறு அணிந்து வந்த முத்தநாதனை, முக்கண்ணன் அடியார் என்றெண்ணி, தமது முடிபட அவனது கால்களிலே விழுந்து வணங்கினார். ஐயனே தாங்கள் எழுந்தருளியது யாது கருதியோ? என்று மலையமநாட்டு மன்னர் பணிவுடன் வினவினார். 

முத்தநாதன் நா கூசாமல் சிவபெருமான் பண்டை காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகம நூல் ஒன்று எம்மிடம் உள்ளது. அதனை உனக்கியம்பி உமக்கு மோட்ச பதவியை அளிக்கவே யான் வந்துள்ளேன் என்று கூறியபடியே தன் கையிலிருந்த ஏட்டுச் சுவடிக்கட்டைக் காண்பித்தான். முத்தநாதனின் கபட வார்த்ததைகளை உண்மை என்று நம்பி மோசம் போன மன்னர் முகம், பகைதனை வென்ற வீரனின் முகம்போல் மலர்ந்தது. 

அரசியாரின் முகமும் கதிரவனைக் கண்ட கமலம் போல் பூரித்தது. அரசர், இரு கை கூப்பி வணங்கியபடியே, இம்மையில் இவ்வடியேனுக்கு இதனினும் உயர்ந்த பேறு வேறு எதுவுமே இல்லை, தேவரீர் அம்பலவாணர் அருளிச் செய்த ஆகம நூலை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளையும் அருளிச் செய்தல் வேண்டும் என்று கூறினார். 

முத்தநாதனுக்கு உயர்ந்த ஆசனத்தை அளித்து, அரசியுடன் தாம் தரையில் அமர்ந்து கொண்டார் மன்னர். உயர்ந்த ஆசனத்தில், தாழ்ந்த உள்ளத்தோடு அமர்ந்திருந்த முத்தநாதன் வஞ்சகப் புன்னகையை உதட்டிலே நெளியவிட்ட வண்ணம், மன்னரையும், அரசியாரையும் மாறி மாறிப் பார்த்தான். எதைப்பற்றியோ சிந்திப்பவன் போல் பாசாங்கு செய்தான். 

முத்தநாதனின் செயலைக் குறிப்பால் உணர்ந்த மெய்ப்பொருளார், தேவரீர்! யாது சொல்லத் தயங்குகிறீர்! என்று கேட்டார் மன்னர்! பக்தா! இவ்வாகம நூலைப் போதிக்கும் போது, மலர் மாலை சூடிய கூந்தலையுடைய தங்கள் அரசியார் பக்கத்தில் இருக்கக்கூடாது. இதை நான் சொல்லவில்லை. ஆகம நெறிதான் இவ்வாறு எடுத்து இயம்புகிறது. என்று முத்தநாதன் சொன்னான். உடனே மன்னர். திருமகளைப் போல் அருகே நின்று கொண்டிருந்த அரசியாரைப் பார்த்தார். கணவரின் கட்டளையைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட கற்புடைச் செல்வியான அரசியார், அரசரையும், முத்தநாதனையும் தொழுதுவிட்டு, அந்தப்புரம் நோக்கிச் சென்றாள். 

முத்தநாதன் சங்கரா சிவ! சிவா! என்று பலமாக இறைவனின் திருநாமத்தை ஓதியபடியே, திருவெண்ணீற்றை எடுத்த உடம்பிலும் நெற்றியிலும் தேய்துக் கொண்டு மன்னனுக்கும் கொடுத்தான். திருவெண்ணீற்றை வாங்கி, பயபக்தியோடு நெற்றியிலும், மேனியிலும், முறையோடு விதிப்படி ஐந்தெழுத்தை மனதில் நினைத்தபடியே அணிந்து கொண்டார் மன்னர்! ஐயனே! இவ்வடியேனுக்கு அருள் செய்தல் வேண்டும் என்று பணிவுடன் வேண்டி நின்றார் மன்னர். 

மன்னவர் சிரம் தாழ்த்தி முத்தநாதனை வணங்கிய போது அப்பகையரசன் ஏட்டுச் சுவடியைப் பிரிப்பது போல் அதனுள் இருந்த உடைவாளை வெளியே எடுத்தான். மன்னர் தலைவணங்கி நின்ற தருணம் பார்த்து அந்த வஞ்சகன் தான் நினைத்தபடியே செய்தான். அந்நிலையிலும், மன்னர் மனம் அவன் மீது சற்று கூட வெறுப்போ, வேதனையே, கோபமோ, கொள்ளவில்லை. மெய்ப்பொருளார், மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார்.

குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார். முத்தநாதன் வாளெடுத்து மன்னரைத் தாக்கியதை மறைந்திருந்து பார்த்து மெய்க் காப்பாளன் தத்தன் நொடிப் பொழுதில், உள்ளே நுழைந்து, முத்தநாதனைக் கொல்லத் தன் உடைவாளை உருவினான். குருதி கொட்ட, தரையில் சாய்ந்து வீழ்கின்ற மெய்பொருளார் அந்த நிலையிலும் தமது வீரக்கரங்களை உயர்த்தி அவனைத் தடுத்து தத்தா நமர் என்று கூறிச் சாய்ந்தார். 

தத்தா! இவர் நம்மைச் சேர்ந்தவர் என்ற பொருளை உணர்ந்த தத்தா நமர் என்று பகர்ந்து, நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்தான் தத்தன், தலை வணங்கினான். அவன் உள்ளம் கோபத்தால் துடி துடித்த போதும், தாபத்தால் உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரியத்தான் செய்தன. கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன். 

மன்னர் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு, தத்தனிடம், தத்தா! இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லை வரைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவாயாக! என்று ஆணையிட்டார். மறுமொழி பேசாது, அப்படியே ஆகட்டும் வேந்தே! என்றவாறே அரசரை வணங்கிவிட்டு அந்த அரக்கமனம் கொண்ட பகையரசனோடு புறப்பட்டான் தத்தன். 

மன்னர்க்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீபோல் நாடு நகரமெங்கும் பரவியது. அரசியார் செய்தியறிந்து அந்தப்புரத்தில் இருந்து உள்ளம் பதைபதைக்க ஓடோடி வந்தாள். ஐயனை மடிமீது தாங்கி பலவாறு புலம்பி அழுதாள். முத்தநாதனின் கொடிய செயலைக் கேள்வியுற்றுக் கொதித்தெழுந்தனர் மக்கள். தத்தன் மக்களிடம் மன்னர் ஆணையை எடுத்துக் கூறினான். அனைவரும் வேதனையோடு மன்னரைக் காண அரண்மனைக்கு வெள்ளம் போல் திரண்டு சென்றனர். 

தத்தனும் முத்தநாதனை நகரின் எல்லையைக் தாண்டி கொண்டு போய் சேர்த்தான். காற்றிலும் கடுகி அரண்மனை விரைந்தான். தத்தன் வரும்வரை மன்னர் உயிர் துடித்துக் கொண்டே தான் இருந்தது. மன்னரது கவலை எல்லாம் முத்தநாதனுக்கு எவ்வித பேராபத்தும் நேரக்கூடாதே என்பதுதான்! தத்தன், விரைந்து வந்து, மன்னரை வணங்கி, அரசே! தங்கள் ஆணைப்படி அத்தவசியை நல்ல முறையில் ஆபத்து எதுவுமின்றி எல்லையைக் கடந்து அனுப்பி வைத்தேன் என்றான். 

மன்னர் நாக்குழற, இன்றைக்கு என் ஐயன் செய்தது யாரே செய்யவல்லார் என்று கூறியவாறே தலையைச் சாய்த்தார். அவரது ஆவியும் பிரிந்தது. அப்பொழுது அவ்வறையிலே பேரொளி பிறந்தது. இடபத்தின் மேல் எம்பெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளினார். எம்பெருமான் திருவருளால் மெய்பொருளார் புதுப்பொலிவுடனும், இளமையுடனும் உயிர் பெற்று எழுந்தார். 

அரசியார் அகம் மகிழ்ந்தார்கள். தத்தன் ஆனந்தத்தால் தத்திக் களித்தான். மக்கள் மனம் மகிழ்ந்தனர். மெய்ப்பொருளார்க்கு ஆனந்தக் காட்சி அளித்த அம்பலத்தாண்டவன் அச்சிவனருட் செல்வர்க்கும், அவரது அருமை மனைவியர்க்கும் எப்பொழுதும் தம்மோடு வாழும் சிவப்பேற்றினை அருளினார். உயிர் போகின்ற சமயத்திலும் கூட, சிவனடியார்களிடத்தும், வெண்ணீறு அணிந்தவர்களிடத்தும் பக்தியுடையவராய் வாழுங்கள் என்று வாழ்ந்து காட்டி, உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் என்றால் அவரது பக்தி எத்துணைச் சிறப்பு மிக்கது என்பதனை அளவிடயாரேவல்லார்.

கதைச்சுருக்கம் கையாளப்பெற்ற இணையதளம்:http://rbrseetha.blogspot.in/2016/07/05.html


மெய்ப்பொருள் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

பொழிப்புரை :

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

பாடல் எண் : 2

அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.

பொழிப்புரை :

அவர், நல்லாட்சி செலுத்துதற்குரிய அரசியல் நெறியில் நின்றும், வழிவழியாகப் போற்றி வரும் அறநெறியைத் தவறாமல் பாதுகாத்தும், மலையனைய நெடிய தம் தோள்வலியால் பகைவரை வென்று அப்பகைவரின் படைவலியை அழித்தும், தாம் கூறிய சொற்களினின்றும் வேறுபடாது நன்னெறிகளைப் போற்றி வரும் குணங்களால் உயர்ந்தும், அலைவீசுகின்ற கங்கையைத் தாங் கிய திருச்சடையையுடைய சிவபெருமானின் அடியவர் திருவேடத் தையே சிந்தை செய்தும் வருவார்.

பாடல் எண் : 3

மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு கூற்றில் வைத்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்தினும் நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் குறையாது நடத்தி, ஏழிசையோடு கூடிய பாடல்களும், ஆடல்களும் மேன்மேலும் சிறப்பாக ஓங்க அவற்றைப் பாதுகாத்து வாழ்கின்றவர். தம் தலைவராகிய சிவபெரு மானின் அடியவர் திருவடிகளையன்றி வேறொரு பற்றுக் கோடும் இல்லாதவர்.

பாடல் எண் : 4

தேடிய மாடும் நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்
காவன ஆகும் என்று
நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவறக் கொடுத்து வந்தார்.

பொழிப்புரை :

அவர், தாம் தேடிய செல்வங்களும், தம் முன்னோ ரால் ஈட்டப் பெற்று வழிவழியாகக்காத்துவரும் மற்ற செல்வங்களும் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடல் செய்தருளுகின்ற பெருமானின் அடியவர்களுக்கே உரியனவாம் என்று விரும்பிய மனத்தினோடு, சிவனடியார்கள் தம்மிடத்திற்கு எழுந்தருளும் பொழுது, தம் உள்ளத் தில் நிறைந்த அன்பின் மகிழ்ச்சி மிக, வேண்டிய பொருள்களை யெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வந்தார்.

பாடல் எண் : 5

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப்
பரிபவப் பட்டுப் போனான்.

பொழிப்புரை :

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான். 

பாடல் எண் : 6

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

பொழிப்புரை :

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

பாடல் எண் : 7

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

பொழிப்புரை :

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

பாடல் எண் : 8

மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும்
சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில்
திருமணி வாயில் சேர்ந்தான்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய தவவேடத்தைத் தாங்கிக் கொண்டு வந்த கொடியவனாகிய முத்தநாதன், மேல் மாடங்கள் தொறும் மாலைகள் சூழ்ந்த கூந்தலையும் குழைகளையும் உடைய கொடிபோலும் அசைதலை யுடைய மகளிர்கள் நடனமாட, அவற்றின் மீது வெண்மையாக ஒளி விளங்கும் கொடிகள் அசைய, காண்டற்கு இடனாய ஒளிபொருந்திய நீண்ட வீதியில் சென்று, சேதி நாட்டு அரசராய மெய்ப்பொருள் நாயனாரது அழகிய மணிகள் பொருந்திய அரண்மனை வாயிலை அடைந்தான்.

பாடல் எண் : 9

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

பொழிப்புரை :

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

பாடல் எண் : 10

என்றவன் கூறக் கேட்டே
யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல்மென் சாயல்
மாதேவி இருப்பக் கண்டான்.

பொழிப்புரை :

தத்தன் இவ்வாறு கூறக் கேட்டமுத்தநாதன், `யான் அவ்வரசனுக்கு உறுதி கூற வந்துள்ளேன், ஆதலின் நீ தடை செய்யாது இங்கு நிற்பாயாக` என்று கூறியவாறு, அத்தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பொன்னாலாய விளக்கம் பொருந்திய பள்ளிக் கட்டிலில் மெய்ப்பொருள் நாயனார் துயிலவும், அவர் அருகில் நறுமணம் பொருந்திய கூந்தலையும் மென்மையையும் உடைய அவர் மனைவியார் இருக்கவும் கண்டான்.

பாடல் எண் : 11

கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட
ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று
கொள்கையின் வணங்கி நின்று.

பொழிப்புரை :

மன்னவன் துயிலவும் அருகில் மாதேவி இருக் கவும் கண்டும், திரும்பாமல் மேலே சென்று, அக்கட்டிலை நெருங்க வும், விரைந்து எழுந்த அத்தேவியார், வண்டுகள் மொய்த்தற்கு இடனாக அலர்ந்த மாலையை அணிந்த மெய்ப்பொருளாராய தம் தலைவரை எழுப்பிடத் துயிலுணர்ந்த அம்மன்னர், `சிவபெருமானின் அடியவர் இவர்` என்று தலைமீது குவித்த சிவந்த திருக்கரங்ளை உடையவராய்ப் பள்ளிக் கட்டிலினின்றும் எழுந்து நின்று.

பாடல் எண் : 12

மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

பொழிப்புரை :

`மங்கலம் பெருக என்வாழ்வே ஓர் உருவெடுத்து வந்தாற்போல, இவ்விடத்திற்கு எழுந்தருளப் பெற்றது யாது கருதியோ?` என்று மெய்ப்பொருளார் வினவ, முத்தநாதன், `உங்கள் தலைவர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன்; உமக்கு உபதேசிப்பதற்காக` என்றனன்.

பாடல் எண் : 13

பேறெனக் கிதன்மேல் உண்டோ
பிரானருள் செய்த இந்த
மாறில்ஆ கமத்தை வாசித்
தருள்செய வேண்டு மென்ன
நாறுபூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறிடத் திருத்தல் வேண்டும்
என்றவன் விளம்ப வேந்தன்.

பொழிப்புரை :

இவ்வாறு எழுந்தருளி உபதேசிப்பதினும் உயர்ந்த பேறு வேறு அடியேனுக்கு உண்டோ? (இல்லை). சிவபெருமான் அருளிச் செய்த குற்றமற்ற இச்சிவாகம நூலை வாசித்து அதன் பொருள் விளங்க அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்ட, நறுமணம் கமழ் கின்ற மலரணிந்த கூந்தலையுடைய உன் தேவி இவ்விடத்தினின்றும் நீங்க, நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும் என அம்முத்த நாதன் சொல்ல மெய்ப்பொருள் நாயனாரும். 

பாடல் எண் : 14

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

பொழிப்புரை :

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

பாடல் எண் : 15

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருளெனத் தொழுது வென்றார்.

பொழிப்புரை :

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

பாடல் எண் : 16

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

பொழிப்புரை :

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

பாடல் எண் : 17

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

பொழிப்புரை :

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

பாடல் எண் : 18

அத்திறம் அறிந்தார் எல்லாம்
அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.

பொழிப்புரை :

அச் செய்கையை அறிந்தவர்கள் எல்லாரும், நம் அரசனுக்கு தீங்கு செய்த பொய்ம்மையான தவ வேடத்தையுடைய இவனைக் கொல்வோம் என்று அவர் அருகில் சூழ்ந்த பொழுது, தத்தன் என்பான், அவர்களை யெல்லாம் தடுத்துத் தன்னுடன் அவனைக் கொண்டு போகின்றவனாய், அவர்களை நோக்கி, இப் பொய்த் தவத்தினை உடையான் உயிருடன் போதல் இறைவனது ஆணை யாம் என்று கூறினன்.

பாடல் எண் : 19

அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன்
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.

பொழிப்புரை :

இறைவன் ஆணையென்று கூறியதும் அவனைச் சூழ்ந்தவர்களெல்லாம் அஞ்சி அவ்விடத்தினின்றும் பெயர்ந்து செல்ல, செல்லுதற்குப் பாதுகாப்பாய வழியில் தத்தன் என்பான் அந்நகரத்தைக் கடந்து சென்று, கையிடத்துக் கூரிய நீண்ட வாளை ஏந்திய வண்ணம், மனிதர்கள் இயங்காத காட்டை அடைந்து தீத்தொழிலினனாய அக் கொடியவனை விடுத்து மீண்டு வந்தான்.

பாடல் எண் : 20

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

பொழிப்புரை :

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

பாடல் எண் : 21

 சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.

பொழிப்புரை :

தத்தன் மெய்ப்பொருள் நாயனாரிடத்து அணுகச் சென்று, அவர் திருவடிகளை வணங்கி நின்று, செயற்கையாக மேற் கொண்ட தவவேடத்தைத் தாங்கித் தன்னளவில் வென்றதாகக் கருதிய அம் முத்தநாதனுக்கு, யாதொரு இடையூறுமின்றித் தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டனன், என்று விண்ணப்பிக்க, நாயனாரும், இன்று என் தலைவனாக விளங்கும் நீ செய்த உதவியை யாவர் செய்ய வல்லவர்? என்று கூறி, தன்முன் நின்ற தத்தனைப் பார்த்துத்தம் மனம் நிறைந்த பெருங் கருணையைச் செய்தார்.

பாடல் எண் : 22

அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.

பொழிப்புரை :

தம் வழி அரசு இயற்றுதற்குரிய இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் முதலியோர்க்கும் தம் உள்ளத்தில் கருக்கொண்டு நிற்கும் கொள்கையைக் கூறுபவராய், `முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் கொண்டு செலுத்தக் கடவீர்` எனும் கட்டளையைக் கூறியபின், மெய்பொரு ளார், திருமன்றில் அருட்கூத்து இயற்றுகின்ற பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

பாடல் எண் : 23

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

பொழிப்புரை :

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

பாடல் எண் : 24

 இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

பொழிப்புரை :

தம் இன்னுயிர் நீங்குமாறு உடைவாளால் சிதைக்கக் கண்டும், எம் சிவபெருமானுடைய அடியாரென்ற திருவேடமே மெய்ப்பொருள், எனத்தாம் கொண்ட நெறியைப் பாதுகாத்த சேதி நாட்டின் அரசராகிய மெய்பொருள் நாயனார் பெருமையில் என்னால் இயன்றவகையில் ஒரு சிறிது சொன்னேன்: இனி வலிமை யுடைய விறன் மிண்ட நாயனாரின் அழகிய திருவடிகளைத் தலைமேற் கொண்டு அவர் முன் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.

     பாடலும் விளக்கமும் இணைப்பு: http://www.thevaaram.org/thirumurai_1