Monday, July 18, 2016

அலகு-1-பிள்ளைச் சிறு விண்ணப்பம் – இராமலிங்க அடிகளார்

பிள்ளைச் சிறு விண்ணப்பம்இராமலிங்க அடிகளார்
       பிள்ளைப் பருவத்துத் துள்ளும் உள்ளத்தில் எழும் விழைவு விருப்புக்கள் சிவற்றை எடுத்தோதி இறைவன்பால் விண்ணப்பம் செய்வது. சிறு விண்ணப்பம் என்பது சிலவாகிய விண்ணப்பங்களின் மேல் நிற்கிறது. கிறித்துவ சமயத்து அன்பர்கள் தமது விழைவு விருப்பங்களை இறைவனிடத்தில் முறையிடுவது போல இது வடலூர் வள்ளலார் திருவுள்ளத்தில் புதிது தோன்றிய முறையீடாகும்.
      ஆங்கில நாட்டு ஞானப் பெருந்தகையான வில்லியம் லா என்பவர் எழுதிய சீரியஸ் கால்” (A Serious Call) என்ற நூற் பொருளை ஒப்பு நோக்குவது இவ் விண்ணப்பத்தின் நுண்மாண்பை உணர்தற்கு துணை செய்யும்.
      இதன்கண், செய்த குற்றங்களால் எய்தும் துன்பத்திற்கு ஆற்றாது அருளாதரவு செய்க என இறைவனிடம் விண்ணப்பித்தலும், தம்மை வெறுத்தலாகாதென வேண்டுதலும், செம்மறிக் கருணைத் திருநெறியை விளக்குவதும், பொய்ம்மை வேண்டாமையும், கருவி கரங்ணங்களின் இயக்கம் உணர்தலும் போக நுகர்ச்சியும் திருவருட் புணர்ப்பு என்பதும், மகளிர் கூட்டத்தை மதியாமை கூறலும், ஆன்ம சுதந்திரமின்மை விளக்கவும், காசாசை யின்மை தெரிவிப்பதும், உயிர்கட்கு இன்பம் செய்ய எழும் இச்சையும், மாந்தரனைவரும் அன்பால் போற்றி வாழ்த்தி இன்புற்றலை விழைவதும், சிதம்பரம் புதுக்கித் திருமேனி கண்டு திருவிழா எடுக்கும் ஆர்வத்தை விண்ணப்பிப்பதும், சமரச ஞான சுத்த சன்மார்க்க நெறியை விளக்குவதும், புலை கொலை தவிர்க்கும் அருள் அற வேட்கையும் பிறவித் துன்பமற வரம் பெற விழைவதும், பிறவும் கூறி, விரிந்தது தொகுத்து ஓதப்படுகின்றன. இவ்விண்ணப்ப முறை நம்பியாரூரர்விருந்தாய சொன்மாலைஎன்று சிறப்பிக்கும் மாலை வகையில் அடங்கும்.
      எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
1.
     தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
          தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
     பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
          பேசிய தந்தையும் தாயும்
     பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
          புனிதநீ ஆதலால் என்னை
     அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
          அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.
உரை:
     அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, வளர்ச்சியால் உடல் தடித்த மகன் செய்த தவறு கண்டு தந்தை யவனை யடிப்பானாயின், உடனே தாய் அவ்விடம் போந்து தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடிப்பாளாயின், தன் கையிற் பற்றிப் பிடித்துக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை யுடையனாய்த் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, இவ்வுலகில் எனக்கு நூல்கள் உரைத்த தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உனதருளால் என்னை ஆதரிக்க வேண்டும்; இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன். .று.
        2.
     பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
          பெற்றவர் அறிவரே அல்லால்
     மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
          வள்ளலே மன்றிலே நடிக்கும்
     கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
          குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
     முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
          முனிவதென் முனிவுதீர்ந் தருளே.
உரை:
     அம்பலத்திலே திருக்கூத் தியற்றும் அருளரசே, என் குணங்களை யுடைய இறைவனே, என்னைப் பெற்ற அருள் வள்ளலே, தாம் பெற்ற பிள்ளைகளின் குணங்களை யெல்லாம் பெற்றவராகிய தாய் தந்தையர் அறிவார்களே யன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் மேற் கொண்டுள்ள குணங்களாற் கொடியவனாயினேன்; என்னுடைய குணங்கள் அனைத்தையும் நீ முற்றவும் நன்கறிவாய்; அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று ஆண்டருள்க. .று.

3.
     வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
          விரும்பினும் அங்ஙனம் புரியச்
     சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
          தந்தைதாய் மகன்விருப் பாலே
     இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
          என்றனை விழைவிக்க விழைந்தேன்
     செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
          திருவுளம் அறியுமே எந்தாய்.
உரை:
     வெவ்விய அறிவும் கொடுமைப் பண்புமுடைய மகன் கொடிய செயலொன்றைச் செய்யவிரும்புவானாயின், மகன்பால் உள்ள ஆசையால் அவனைப் பெற்ற தாயும் தந்தையும் அவன் புரியும் கொடுஞ் செயலுக்கு உடன்படுகின்றனர்; இந்த மதியுடைய சிறியவனாகிய யான் குற்ற மொன்றும், செய்ததில்லை; என் மனத்தில் உன்பால் அன்புண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன்; செவ்விய அறிஞர் மதிக்கும் அருளமைந்த திருநெறியும் இதுவாகும்; இவை யனைத்தும் சிவ பெருமானாகிய எந்தையே, உனது திருவுள்ளம் அறிந்த செய்தி யன்றோ. .று.
4.
     பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
          புல்முனை ஆயினும் பிறர்க்கு
     நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
          நண்ணிய கருணையால் பலவே.
     கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
          கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
     செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
          திருவுளம் அறியுமே எந்தாய்.

உரை:
     எந்தையாகிய சிவபெருமானே, பொய் கூறுதல் முதலிய குற்றங்கள் எண்ணிறந்தன செய்வேனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டு பண்ணும் பிழை சிறிது உளதாயினும் வாயாற் சொல்ல மாட்டேன்; பிறர்பால் உண்டாகிய அருளுணர்வால் சிறு பிழைகள் பலவும் செய்ய நினைப்பதில்லேன்; நின்னுடைய திருவடிப் பேற்றின் கண் ஆர்வம் உடையனாவதன்றிச் செய்தற்குரிய பிழை வேறே ஒன்றும் அறியேன்; ஐயோ, எனது இந்நிலைமை தேவரீர் அறிந்ததன்றோ .று.
5.
     இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான்
          இருக்கவும் ஆசைஇன் றினிநான்
     பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
          பெரியவர் பெரியவர் எனவே
     சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
          செய்யவும் ஆசைஒன் றில்லை
     துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
          தூங்கவும் ஆசைஒன் றிலையே.

உரை:
     எந்தையாகிய சிவபிரானே, இவ்வுலகில் இறந்துபடுதற்கும் எனக்கு விருப்ப முண்டாகவில்லை; இப்படியே பயனற்றிருந் தொழிவதற்கும் விருப்பமில்லை; இறந்த பின் வேறு பிறப்பெடுக்கவும் ஆசை யுண்டாகிற தில்லை; இனி, இவ்வுலகில் இவர் பெரியவர் பெரியவர் எனக் கண்டோர் சிறப்பிக்கின்ற நிலையைப் பெற ஆசை கொள்ளவில்லை; மந்திர தந்திர சாலங்கள் செய்யவும் ஆசையில்லை; உலகியற் பற்றற்ற துறவி யாதற்கும் எனக்கு விருப்பமில்லை; இன்பம் சிறிதுமின்றி, துன்ப நிலையிலேயே இருக்கவும் விருப்புண்டாக வில்லை, காண். .று.
மூலமும் உரையும்:
http://www.tamilvu.org/

7 comments: