Friday, July 17, 2015

திருவெம்பாவை

திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)


திருச்சிற்றம்பலம்

1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் 
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

 தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய 
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! 
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; 
அமளி - படுக்கை.


2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் 
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

  தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், 
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். 
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
 படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? 
 தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? 
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் 
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் 
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர் 
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ 
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை 
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

  தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !
 படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?
 தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ 
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ 
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் 
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே 
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் 
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் 
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து 
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

 தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! 
இன்னுமா விடியவில்லை ? 
 படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ? 
 தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் 
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம். 
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).


5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் 
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் 
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் 
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் 
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) 
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் 
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

 தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற 
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற ! 
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு 
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு 
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று 
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! 
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

6.
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை 
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 
வானே நிலனே பிறவே அறிவரியான் 
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் 
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

 தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா 
பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்
அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி
நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய
கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்
தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான 
சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

7.
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் 
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான் 
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் 
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் 
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும் 
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ 
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் 
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

 தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!
பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று
சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி 
முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் 
கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் 
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் 
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய் 
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை 
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

 தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) 
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

9.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே 
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் 
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து 
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம் 
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் 
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

 பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான
நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே
நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்
பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்
எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு 
- அடிமை

10.
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் 
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே 
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் 
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் 
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் 
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் 
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் 
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

 அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் 
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய 
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் 
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற 
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.


நன்றி: மேற்கண்ட பாடலும் விளக்கமும் கிழ்கண்ட இணையதளத்திலிருந்து எடுத்தாளப்பெற்றுள்ளது.