Wednesday, October 17, 2012

காரைக்காலம்மையார் புராணம் - பெரியபுராணம்


பெரியபுராணம் என்பது 11 ஆம் அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சேக்கிழார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல். சைவ சமயத்தைச் சார்ந்த இந்த நூல் சிவனடியார்களின் பெருமையையும் அவர்கள் வரலாற்றையும் எடுத்துக்கூற எழுந்த நூலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத்தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி  ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர்.  இந்நூல் இரண்டு காண்டங்களாகவும் 13 சருக்கங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் நமக்கு பாடமாக உள்ள காரைக்கால் அம்மையார் புராணத்தின் மூலமும் அதன் கதை வடிவத்தையும் காணலாம்.

பெரிய புராணம்  -   காரைக்காலம்மையார் புராணம்
 1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்               
 ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி  ஓங்கு பதி      
 கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்  
 கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்   

 2. வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்    
 தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்       
 அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து            
 பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்          

 3. வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்  
 அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
 பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்          
 தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்

 4. பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்   
 செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய       
 மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்           
 அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்

 5. நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
 மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்   
 இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்  
 தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்          

 6. நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்       
 பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்      
 தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
 மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்    

 7. வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து            
 தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த    
 பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு           
 முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்   

 8. மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து  செலவு இடச் சென்று          
 உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்          
 பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்  
 சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்         

 9. மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்               
 அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே   
 இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி        
 பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்           

 10. அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து       
 தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
 தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்          
 களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்      

 11. மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்             
 தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்               
 பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்           
 அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்             

 12. மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம்  கொடுத்து அதன்பின்            
 நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்             
 தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி  
 மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்           

 13.  ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற               
 பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்       
 ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்        
 பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்       

 14. நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
 செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான            
 தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்               
 உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்      

 15. பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு   
 மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப        
 ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே   
 ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்      

 16. கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு  
 மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்      
 பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்       
 உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்               

 17. வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு           
 நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்           
 பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து                
 ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்

 18. கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட  
 வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே              
 பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்             
 அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்  

 19. இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த      
 நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு          
 வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்     
 அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்  

 20. மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
 தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்           
 வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்      
 பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்         

 21. மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்    
 உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்         
 பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்               
 கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்   

 22. இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்             
 மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த     
 நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
 அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்         

 23. மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி             
 தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்        
 இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என            
 அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்    

 24. அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு  அங்கு என்செய்வார்             
 மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்    
 தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்        
 கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று   

 25. மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்   
 உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்              
 முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்        
 பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்            

 26. அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார்  அளித்து அருளும்          
 செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
 கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை                
 மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்      

 27.  செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்      
 மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி               
 எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு  
 மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்     

 28.  ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்  
 வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்     
 தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்    
 ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்              

 29. பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி   
 ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன     
 மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை  
 ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்   

 30. வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்   
 தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி        
 அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்   
 துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்        

 31. விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்               
 படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி               
 நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்           
 வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்         

 32. கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்     
 புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி  
 சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
 நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்           

 33. கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்              
 அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி    
 இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்    
 படர் புனல் கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்         

 34. அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்         
 ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
 மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற          
 செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்            

 35. பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை     
 அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்     
 புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு               
 முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்     

 36. முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்         
 இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்            
 பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்             
 பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்         

 37. மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு               
 உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்              
 தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு            
 கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்  

 38. இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்      
 கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன             
 தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்     
 மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக

 39. விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்            
 வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி               
 அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று               
 கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம்  கேட்டார் அன்றே            

 40. அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்           
 தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு          
 மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்   
 கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்        

 41. மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்              
 தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்     
 காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்              
 தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்             

 42. சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி              
 மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து    
 குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை       
 தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்  

 43. வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
 சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த      
 பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு      
 முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்               

 44. தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்                
 மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே     
 யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்    
 பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்    

 45. கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
 அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப           
 உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை          
 மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்          

 46. மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்           
 நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு                
 பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே   
 பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்                

 47. என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்        
 மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்         
 கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை              
 ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்            

 48.  ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்               
 தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்                
 ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்       
 பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்        

 49.  ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே   
 மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்          
 ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக             
 வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்          

 50. மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்    
 உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்           
 குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
 தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்   

 51. உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை            
 அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்   
 பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்          
 நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி          

 52.  ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி  
 ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்  
 காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண               
 வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்      

 53. கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்       
 கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே       
 அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை             
 எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்

 54. வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று             
 தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்           
 படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்      
 நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்    

 55. தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி         
 மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
 கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்             
 சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே     

 56. அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து        
 தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்                
 எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன             
 நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்                

 57.  வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண்  உமையே மற்று இப்        
 பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை    
 பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை              
 ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்          

 58. அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று        
 பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்            
 சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்              
 இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்       

 59. இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்           
 பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்               
 மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி            
 அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்            

 60. கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்        
 நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்     
 ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்           
 பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்       

 61. அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
 மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து                
 செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்                
 நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே             

 62.  ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற             
 கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு            
 மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி         
 ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்            

 63. மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்       
 இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி     
 எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்    
 கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்    

 64. மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி           
 கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்            
 எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை                
 அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா     


    





காரைக்காலம்மையார் புராணம் – (கதை வடிவில்)
ஒரு பங்குனி மாதத்தின், ஸ்வாதி நட்சத்திர நாளன்று, சோழ நாட்டிலுள்ள காரைக்காலில் தன் வீட்டில் தனதத்தன் குட்டிப் போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே உள்ளறையிலிருந்து பிரசவம் பார்த்த தாதி* வெளியே வந்து அவரிடம், “அய்யா உங்களுக்கு திருமகளைப்* போல ஒரு பெண் பிறந்திருக்கிறாள்” என்று கூறினாள். “அப்பனே! சிவனே எனக்கு குழந்தை இல்லாத குறையைப் போக்கி விட்டாய்”, என்று அந்த சிவனைப் பிராத்தித்து, தன் கழுத்தில் இருந்த ஒரு மணி மாலையை அந்த தாதிக்கு பரிசாக கொடுத்தார். உள்ளறைக்குச் சென்று குழந்தையைப் பார்த்த தனதத்தனை, அவர் மனைவி தர்மவதி, “நம் குழந்தையைப் பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டார்?” அவரும், “புனிதவதி என்றுப் பெயரிட்டு அழைப்போம்” என்று கூறினார். 


நாட்கள் மெதுவாக நகர்ந்தன. புனிதவதி வளர ஆரம்பித்தாள். அவள் வளர வளர, தனதத்தனின் வியாபாரமும் நன்றாக வளர்ந்தது. ஏற்கானவே பெரும் செல்வந்தராக இருந்தவருக்கு மேலும் செல்வம் பெருகியது. புனிதவதி தன் வயது ஒத்த குழந்தைகளோடு விளையாடாமல், எப்பவும் சிவப் பக்தியோடு வளைய வந்தாள். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே, சிவன் கோவில்களுக்குச் சென்று சிவனுக்கு தொண்டுப் புரிந்து வந்தாள். எப்பொழுதும் சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டும், சிவனடியார்களைக் கண்டால், அந்த சிவனையேப் பார்த்த மாதிரி பரவசப்பட்டாள். இப்படியாக வளர்ந்து திருமணப் பருவம் எய்தினாள். 

அப்பொழுது அவளைப் பார்ப்பவர்கள் எல்லாம்,” இப்படி ஒரு அழகான பெண் உலகத்தில் இருக்க முடியுமா?” என்று வியந்தார்கள். அப்படி ஒரு தெய்வீக அழகோடு அவள் விளங்கினாள். தர்மவதி ஒரு நாள் தன் கணவனிடம், “என்னங்க புனிதவதிக்கு கலியானம் செய்து வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள்” என்றார். “நானும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நம் மகளுக்கு இருக்கிற அழகுக்கும், அறிவுக்கும், பக்திக்கும் சரியான துணை அமையவில்லையே!!! என்ன பண்ணுவது. நம் மகள் வணங்குகிற சிவன் தான் அவளுக்கு ஒரு நல்ல கணவனை கொடுக்க வேண்டும்” என்றார் தனதத்தன். அவருடைய பிராத்தனை, இறைவனின் காதில் விழுந்தது விட்டது போலும், நாகப்பட்டினத்தில் வசித்து வந்த வணிகர் நந்திபதி, புனிதவதியின் குணத்தையும், அழகையும் கேள்விப்படு, தன் மகன் பரமதத்தனுக்கு மணம் முடிக்க எண்ணினார். இரு குடும்பமும் பேசி புனிதவதிக்கு, பரமதத்தனை கலியாணம் செய்து வைத்தார்கள். புனிதவதியின் தந்தைக்கு தன் ஒரே மகளை விட்டுப் பிரிய மனமில்லாததால், மருமகனை நாகப்பட்டினத்திற்குப் போகாமல், காரைக்காலிலே வசிக்குமாறு வேண்டிக்கொண்டார். அதனால் பரமதத்தனும் புனிதவதியும் காரைக்காலில் வசித்து வந்தனர். 



பரமதத்தனும் காரைக்காலில் நேர்மையாக வணிகத் தொழிலை நடத்தி வந்தான். புனிதவதியாருக்கும் இறைவனிடத்தில் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருந்தது. எந்நேரமும் சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டும், சிவனடியார்களை உபசரித்துக்கொண்டும் இருந்தார். ஒரு நாள் பரமதத்தன் தன் கடையில் இருக்கும் பொழுது, அவருடைய வடிக்கையாளர்களில் ஒருவர், இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கொடுத்தார். அதை பரமதத்தனும் தன் வீட்டிற்கு, கடையில் வேலை பார்ப்பவரிடம் கொடுத்து அனுப்பினான். புனிதவதியாரும் அதை வாங்கி வைத்து விட்டு மதிய உணவிற்கான ஏற்பாட்டை செய்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது, வீட்டு வாசலிலுருந்து, “சிவாய நம” என்று குரல் கேட்டது. உடனே, புனிதவதியாரும் வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கே ஒரு சிவனடியார்ர் நின்றுக் கொண்டு இருந்தார். அவரை இன்முகத்துடன் உள்ளே அழைத்தவருக்கு, பசியால் வாடும் அடியவரின் முகத்தைக் கண்டவுடன் அதிர்ச்சியாகிவிட்டது, உடனே வெகு சீக்கிரமாக சமையலை முடித்து, அவருக்கு உணவு பரிமாறினார். அந்த அடியாரும், இருந்த பசிக்கு வயிறார உண்டார். 


பிறகு தன் கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அந்த அடியாருக்கு கொடுத்தார். அவருக்கோ மகிழ்ச்சி தாங்க வில்லை, அந்த மாங்கனியையும் உண்டு, புனிதவதியாரை மனமார வாழ்த்திவிட்டு சென்றார். சற்று நேரத்திற்குப் பிறகு, வழக்கம் போல் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு, புனிதவதியார் உணவு பரிமாறிவிட்டு, மீதி இருக்கிற ஒரு மங்கனியைக் கொடுத்தார். 

பரமதத்தனும் அதைச் சாப்பிட்டுவிட்டு, இன்னும் ஒன்று இருக்குமே அதையும் இலையில் இடுக என்று பணித்தான். கணவனின் கட்டளையை கேட்ட, புனிதவதியாருக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. இன்னொரு கனி இல்லையென்று சொல்லிவிடலாமா என்று ஒரு நொடி எண்ணினார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கனியை எடுத்து வருபவர் போல் உள்ளே சென்றார். சிவனை நினைத்து கணை மூடிக்கொண்டு, “ஈஸ்வரா, இதற்கு நீ தான் ஒரு வழி செய்ய வேண்டும் என்று பிரத்தித்தார்” . அந்த ஈஸ்வரனும், இவருடைய வேண்டுதளுக்கு செவி சாய்த்து, புனிதவதியாரின் கைகளில் ஒரு மாங்கனியை வைக்கச் செய்தார். கைகளில் ஒரு மாங்கனியைப் பார்த்தவுடன், புனிதவதியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இறைவனுக்கு நன்றியை மனதில் தெரிவித்துக்கொண்டு, அந்த மாங்கனியை, பரமதத்தனின் இலையில் பரிமாறினார். 

பரமதத்தனும் அந்தக் கனியை உண்டவுடன், ஆஹா! ஆஹா! என்ன ஒரு சுவை, இப்படிப்பட்ட ஒரு மாங்கனியை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லையே! முதலில் சாப்பிட்ட கணியின் சுவைக்கும், இந்தக் கனியின் சுவைக்கும் சம்பந்தமே இல்லையே! எப்படி இந்தக் கனி மட்டும் இவ்வளவு சுவையாக இருக்க முடியும்? இந்தக் கனி கண்டிப்பாக நான் கொடுத்த கனியாக இருக்க முடியாது, சொல்!!! இது எப்படி உனக்கு கிடைத்தது? என்று புனிதவதியைப் பார்த்து கேள்வி கேட்டான். இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று நினைக்காத புனிதவதியாரோ, எப்படி கணவனிடம் உண்மையை சொல்லிப் புரியவைப்பது என்று தடுமாறினார். இருப்பினும் கணவனிடம் உண்மையை மறைப்பது ஒரு நல்ல மனைவிக்கு அழகல்ல என்று எண்ணி, கணவனிடம் நடந்த எல்லா விசயங்களையும் கூறினார். ஆனால் பரமதத்தனோ இதை சிறிதும் நம்பவில்லை. நம்பாமல், அவரைப் பார்த்து, உலகத்தில் எங்காவது இது மாதிரி நடக்குமா? இறைவனே! உன் கையில் கனியை வைத்தாரா, இதை நான் நம்ப வேண்டுமா என்று பரிகாசம் செய்தான். நீ சொல்வதை நான் நம்ப வேண்டும் என்றால், மீண்டும் இதே மாதிரி ஒரு சுவையான கனியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினான். இப்படி பரமதத்தன் சொன்னதைக் கேட்டவுடன், புனிதவதியாரின் நிலமை மிகவும் தர்ம சங்கடமாகிவிட்டது. இருப்பினும், கணவனின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக, அவர் மீண்டும் உள்ளே சென்று, இறைவனை பிராத்திக்க ஆரம்பித்தார்.  

புனிதவதியார் உள்ளே சென்று, இன்னொரு பழம் தந்தருள வேண்டும், இல்லையேல் என் உரை பொய்யாகும் என்று சிவபெருமானை மனமுருக பிராத்தித்தார். சிவபெருமானும் புனிதவதியாரின் வாக்கு பொய்க்கக்கூடாது என்று எண்ணி, அவர் கையில் இன்னொரு மாங்கனியை வைத்து அருளினார். அதைக் கண்டவுடன் புனிதவதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தார். பரமதத்தனுக்கு மிகவும் ஆச்சிரியமாகி விட்டது. அவன் அதை தன் வாயின் அருகே கொண்டு போனபோது, அது அப்படியே மறைந்து விட்டது. இதைத்தான், “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்று பெரியவர்கள் கூறுவார்கள் போலும். முதலில் கனியைப் பார்தவுடன், ஆச்சிரியமடைந்த பரமதத்தன், அந்த கனி மறைந்தவுடன், மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தன் மனைவியினுடைய சிவ பக்தியால் தான், இந்த அதிசியம் எல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொண்டான். இந்த உண்மையை புரிந்துக்கொண்டதால், அவன் தன் மனைவியை தெய்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். உடனே புனிதவதியாரைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டான். தன் மனைவி தெய்வத்தன்மை உடையவர் என்று நம்ப ஆரம்பித்து விட்டான். 


இறைவனுடைய பூரண அருளைப் பெற்ற உன்னை என்னால் இனிமேல் மனைவியாக பார்க்க முடியாது. உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு தகுதி கிடையாது. அதனால் வெளி உலகுக்கு கணவன் மனைவியாக வாழ்வோம், வீட்டில் தனி தனியாக வாழ்வோம் என்றான். கணவனின் இந்த பேச்சைக் கேட்டவுடன் புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினார். கடைசியில், கணவனின் சொல்லை மீறக்கூடாது என்பதற்காக, அவனுடைய விருப்பத்திற்கு இணங்கி, இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனி தனியே வாழ்ந்தனர். உறவினர்கள் யாருக்கும் தெரியாதபடி இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது, புனிதவதியாரும் உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையை பெற ஆரம்பித்தார். பரமதத்தனோ, இரு விதமான இந்த வாழ்க்கையை வாழ விரும்பாமல், தன் உறவினர்களிடம் வெளியூர் சென்று பொருள் ஈட்டப்போவதாக கூறினான். அவர்களும் அவனுடைய முடிவிற்கு சம்மதம் அளித்தனர். 


அந்த காலங்களில், வணிகர்கள் வெளியூருக்குச் சென்று பொருள் ஈட்டுவது* வழக்கம். அதன்படி, ஒரு நாள் , தன் மனைவியிடமும், உறவினர்களிடமும் விடைப்பெற்று வெளியூருக்குப் புறப்பட்டான், ஆனால் எந்த ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லவில்லை. அவன் பாண்டிய நாட்டிற்கு சென்று வாணிபம் செய்ய ஆரம்பித்தான். சிறிது காலத்திற்கெல்லாம் தன் திறமையால் அவன் அங்கு பெரிய செல்வந்தன் ஆனான். அந்த ஊரில் இருக்கும் ஒரு வணிகர் அவனுடைய செல்வச் சிறப்பையும், அழகையும் உணர்ந்து, தன் மகளை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுத்தார். 


அவனும், தன் இரண்டாவது மனைவியோடு, இன்பமாக வாழ்ந்து வந்தான். அப்படி வாழ்ந்து வந்த போதும், தன் முதல் மனைவியை எப்போதும் மறக்காமல், மனதில் அவளை வணங்கி வந்தான். ஒரு நன்னாளில், அவனுடைய இரண்டாவது மனைவி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றடுத்தாள். அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று தன் முதல் மனைவியின் பெயரை வைத்தான். இப்படி அவனுடைய வாழ்க்கையோ இன்பமாக அமைந்தது. ஆனால், புனிதவதியாரின் வாழ்க்கையோ, அறவழியில் அமைந்தது. எப்போதும் சிவபெருமானை நினைத்துக்கொண்டும், பூஜை செய்துக்கொண்டும் வாழ்ந்து வந்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, புனிதவதியாருக்கும் அவருடைய உறவினர்களுக்கும், மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது.


உறவினர்களோ, புனிதவதியாரை எப்படியும் பரமதத்தனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து, புனிதவதியாரையும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, புனிதவதியார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். புனிதவதியாரின் இந்த திடீர் வருகையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பரமதத்தன்னோ, என்ன செய்வது என்று அஞ்சினான். பிறகு தன் இரண்டாவது மனைவியோடும், குழந்தையோடும் புனிதவதியாரைப் போய் பார்த்தான். பார்த்த உடனே மனைவி, மகளுடன் புனிதவதியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான். பிறகு புனிதவதியாரைப் பார்த்து, நான் உங்களுடைய திருவருளால், நலமாக வாழ்கிறேன். இந்தக் குழந்தைக்கு, தங்களின் பெயரையே சூட்டியுள்ளேன். தாங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கூறினான். தன் கணவனின் செயலைக் கண்டு புனிதவதியார் அஞ்சி ஒதுங்கி நின்றார். பரமதத்தன் புனிதவதியாரின் காலில் விழுந்ததைப் பார்த்த உறவினர்களுக்கோ, பெரிய அதிர்ச்சியாகி விட்டது. பரமதத்தனிடம், மனைவியின் காலடியில் விழலாமா? அப்படி விழக் காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு பரமதத்தனோ, பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள். அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர். 

புனிதவதியாரோ மிகவும் மன வேதனை அடைந்தார். அழகுத் திருமகளாய், இளமை குன்றாத வடிவழகு பெண்ணாய் காட்சி அளித்த புனிதவதியார், தன் இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான் அழகோடும், இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதியார், அந்த நொடியே, சிவபெருமானை நினைத்து, மனம் உருக ஒரு வேண்டுதலை வேண்டினார். உடனே சிவபெருமானை நினைத்து, ஈசனே, இது வரை என் கணவருக்காக தாங்கி நின்ற இந்த அழகு உடல் இனிமேல் எனக்கு வேண்டாம். இந்த அழகு மிகுந்த உடலை யாரும் இனி பார்க்க கூடாது. அதனால், எனக்கு பேய் வடிவம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டினார். அவருடைய வேண்டுதலை செவி சாய்த்த சிவபெருமானும், புனிதவதியாருக்கு, பேய் வடிவத்தைக் கொடுத்து அருள் புரிந்தார். புனிதவதியார் தன் அழகு மிகுந்த உடல் மறைந்து, எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். அங்கு கூடி நின்ற உறவினர்களுக்கு எல்லாம் அதிசியமாக போய் விட்டது. உடனே அவர்கள் எல்லோரும் அவரை வணங்கினார்கள். 


இந்த உருவத்துடன் அவர்கள் நல்ல தமிழ் புலமையும் பெற்றார்கள். நிறைய பாடல்களையும் பாடினார்கள். “திருவந்தாதி”, “மூத்த திருப்பதிகம்”, “திருவிரட்டை மணிமாலை எனும் திருப்பிரபந்தத்தையும்”இயற்றினார். இதனால் புனிதவதியார், காரைக்கால் அம்மையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இரவும், பகலும் எல்லா நேரங்களிலும் சிவனை நினைத்தும், பூசை செய்தும் வாழ்ந்து வந்தார். 


ஒரு நாள், அவருக்கு திரு கைலாய மலைக்குச் சென்று அந்த பரமசிவனை தரிசிக்க எண்ணினார். தான் இருக்கும் இடத்திலிருந்து, பாதயாத்திரையாக கைலாய மலைக்குச் சென்றார். அங்கு மலையின் மீது தன் காலால் நடந்தால், அந்த இடம் மாசுப் பட்டு விடும் என்று எண்ணி, தன் தலையால் மலையேறினார். (அதாவது தலை கீழாக நடந்தார்). புனிதவதியார் அங்கு தலை கீழாக வந்துக் கொண்டிருப்பதை பார்த்த பார்வதி தேவி, ஈஸ்வரனிடம், தலையினால் நடந்து வருகின்ற எலும்பும் தோலுமாய் உருவம் கொண்டவரின் அன்பை நாம் என்ன வென்று சொல்லுவது என்று கூறினார். அதற்கு இறைவன், தேவி! இவர் நம்மை வழிபடும் அம்மையார். இந்த உருவத்தை வேண்டும்மென்று தான் நம்மிடமிருந்து பெற்றார் என்றார். அதனைக் கேட்ட பார்வதி தேவியோ! எல்லோரும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், முதுமையிலும், இளமை வேண்டும் என்று தான் வேண்டுவர்கள். ஆனால் இவரோ, இளமையிலேயே, முதுமை வேண்டும் என்று விரும்பி இருக்கிறாரே, என்று அதிசியப்பட்டார். புனிதவதியாரும், சிவபெருமான் இருக்கிற இடத்திற்கு அருகில் வந்து விட்டார். இவரைப் பார்த்த சிவபெருமனோ! “அம்மையே” என்று அன்பாக அழைத்தார். 

தாய் தந்தை இல்லாத சிவபெருமானே, இவரைப் பார்த்து அம்மையே என்று அழைக்கிறார் என்றால், இவருடைய பக்தியை என்னவென்று சொல்வது. உடனே, புனிதவதியாரும் அப்பா! என்று கூறி, சிவபெருமானின் காலடியில் விழுந்து வணங்கினார். அம்மையே! உமக்கு என்ன வாரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையாரோ, ஈசனே! எனக்கு இன்பத்தில் எல்லாம் சிறந்த இன்பமான “மோட்சம்” வேண்டும் என்றார். நான் மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை, நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், உங்களை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, தாங்கள் “ஆனந்த தாண்டவம்” ஆடும்போது, நான் தங்கள் திருவடிக்கீழ் இருந்து அதைப் பார்க்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும், தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில், நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுக்களிப்பாயாக என்று அருள் புரிந்தார். அம்மையாருக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிறகு அவர் திருவாலங்காட்டை அடைந்து, அந்த ஈசுவரனின் ஆனந்த நடனத்தை கண்டுக் களித்தார். அவ்வாறு கண்டு களிக்கும் போது, திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை ஆகிய பாடல் நூல்களை இயற்றினார்.
                            முற்றும்

நன்றி:
காரைக்காலம்மையார் புராணம்-மூலம் எடுக்கப்பட்ட தளத்தின் இணைப்பு:

காரக்காலம்மையார் புராணத்தை கதைவடிவில் வெளியிட்டிருந்த தளத்தின் இணைப்பு:
http://www.ausnagarathar.org/arivoma4.html

காரைக்கால் அம்மையார் குறித்த பிற இணைப்புகள்:

1 comment: